பழ வவ்வால்களில் நிபா வைரஸ்; கேரள அரசிடம் உறுதிப்படுத்திய ஐ.சி.எம்.ஆர்.


பழ வவ்வால்களில் நிபா வைரஸ்; கேரள அரசிடம் உறுதிப்படுத்திய ஐ.சி.எம்.ஆர்.
x

பழ வவ்வால்களில் நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என கேரள அரசிடம் ஐ.சி.எம்.ஆர். உறுதிப்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

நடப்பு ஆண்டில் கேரளாவின் வயநாடுக்கு அருகேயுள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டது. இதனால், 6 பேருக்கு தொற்று பாதிப்பு காணப்பட்டது. அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டு வந்தது. இதுபற்றி கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, பழ வவ்வால்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐ.சி.எம்.ஆர். ஆய்வு செய்ததில், வயநாடு மாவட்டத்தில் உள்ள வவ்வால்களில் நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தி உள்ளது என்று கூறினார்.

எனினும், இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் இந்த தகவல் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

இந்தியா முழுவதும் எந்த பகுதியிலும் நிபா வைரஸ் தொற்று ஏற்படும். ஆனால், வயநாட்டில் உள்ள வவ்வால்களில் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதனால், தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம் என ஜார்ஜ் கூறியுள்ளார்.


Next Story