கூட்டணி மாறியபின் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ் குமார்


கூட்டணி மாறியபின் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ் குமார்
x

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு வரும் 12-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது.

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் ஆளும் மெகா கூட்டணியைவிட்டு விலகி, பதவியை ராஜினாமா செய்த முதல்-மந்திரி நிதிஷ் குமார், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். புதிய கூட்டணி அரசு அமைந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். பிரதமர் நேரம் ஒதுக்கியதையடுத்து, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை, நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். புதிய கூட்டணி அரசு அமைந்தபின் இருவரும் முதல் முறையாக சந்தித்து பேசி உள்ளனர்.

நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு வரும் 12-ம்தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ள நிலையில், பிரதமருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி தவிர, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் சிலரையும் நிதிஷ் குமார் சந்திக்க உள்ளார். பா.ஜ.க. தலைவர்களுடனான இந்த சந்திப்பின்போது பீகாரில் மாநிலங்களவை தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த பீகார் துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்தனர்.

பீகாரில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.


Next Story