டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இல்லை - மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம்


டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இல்லை - மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம்
x

டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என நிதின் கட்காரி விளக்கமளித்தார்.

டெல்லியில் கடந்த 12-ந்தேதி நடைபெற்ற மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் "காற்று மாசினை குறைக்கும் வகையில் டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்" என கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என நிதின் கட்காரி விளக்கமளித்தார்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நிதின் கட்காரி இந்த விவகாரம் குறித்து மீண்டும் விளக்கமளித்தார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "நான் டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் அல்ல, டீசல் வாகனங்களுக்கு நாங்கள் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை. மாசுபாட்டின் பார்வையில், டீசல் மிகவும் ஆபத்தானது. அது உண்மையில் நாட்டில் சுகாதார பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்பதை தொழில்துறைக்கு பரிந்துரைக்கிறேன்" என கூறினார்.


Next Story