ஆபாச வீடியோக்கள் புகார்: ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு


ஆபாச வீடியோக்கள் புகார்: ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 3 May 2024 5:00 AM GMT (Updated: 3 May 2024 7:22 AM GMT)

ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தற்போது ஹாசன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முடிந்ததும் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகுதான் அவரைப்பற்றிய ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அதுபோல் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் வேலை பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதே போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது. மாஜிஸ்திரேட்டு முன்பு பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்புணர்வுக்கான சட்டப்பிரிவும் எப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா மீது 376(1)N, 354b, 354c, 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு புலனாய்வு குழு போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு 'லுக்-அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.


Next Story