ஓணம் கொண்டாட்டம்: 7000 பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை!


ஓணம் கொண்டாட்டம்: 7000 பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை!
x
தினத்தந்தி 3 Sep 2023 9:25 AM GMT (Updated: 3 Sep 2023 9:27 AM GMT)

திருவாதிரை நடனவிழாவில், 7 ஆயிரத்துக்கும் மேலான பெண்கள் திரண்டு நடனமாடி உலக சாதனை படைத்தனர்.

கோழிக்கோடு,

கேரளத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம். ஓணம் பண்டிகையின் அங்கமாக நடைபெறும் இந்த நடன விழாவில் திரளான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பாடலுடன் ஆடலாய் கவனம் ஈர்ப்பார்கள். எண்ணிக்கையில் அதிகமானோர் கூடுவதை பொறுத்து திருவாதிரை நடனத்தின் பிரமாண்டம் அமையும்.

இந்த நிலையில், திருச்சூர் குட்டநெல்லூர் அரசுக்கல்லூரி மைதானத்தில், மாவட்ட அளவிலான ஓணம் கொண்டாட்டமாக, சுமார் 10 ஆயிரம் பெண்களை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்ட திருவாதிரை நடனவிழாவில், 7 ஆயிரத்துக்கும் மேலான பெண்கள் திரண்டு உலக சாதனை படைத்தனர்.

பெண்களுக்கான குடும்பஸ்ரீ அமைப்பினர் ஒருங்கிணைத்த இந்த விழாவில் 7,027 பெண்கள் பங்கேற்றனர். கேரள சுற்றுலா துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இது லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. முந்தைய உலக நடன சாதனையில் 6,582 பெண்கள் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story