வெகுவிமர்சையாக தொடங்கிய ஓணம் பண்டிகை.. மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க தயாராகும் கேரளா
திருவோண பண்டிகையின் வரவையொட்டி ஆண்டுதோறும் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போணித்துரா நகரில் நடைபெறும் அத்தச் சமய ஊர்வலம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
கேரளா:
கேரளாவில் அரசர்கள் காலம் முதல் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் திருவோண பண்டிகை எல்லா வருடமும் சிங்கமாதம் என்று மலையாளத்தில் அழைக்கப்படும் தமிழில் ஆவணி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும்.
அதற்கு முன்பாக 10 நாட்கள் அஸ்த நட்சத்திரம் வரும் தினத்தன்று அத்த சமயம் என்ற விமர்சையான ஊர்வலம் ஒன்று திருப்பொனித்துரா நகர வீதிகளில் வலம் வரும். இதில் கேரள கலாச்சார முறைப்படி அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்களில் வேடம் அணிந்து கலைஞர்கள் வீதி உலா வருவார்கள்.
இந்த ஊர்வலம் காண்போருக்கு மனதில் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டும். அத்துடன் திருவோணத்தின் துவக்க விழாவாக இந்த நாளை மக்கள் எடுத்துக்கொள்வார்கள். அதன் பின் வரும் 10 நாட்களும் மங்கையர்கள் வீடுகளில் முகப்பில் மலர் கோலம் அமைத்து திருவோணத்தப்பனை வழிபட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க விதவிதமான அலங்காரங்களை செய்வது உண்டு.
இன்று காலை பாரம்பரிய நிகழ்வான திருக்காக்கரா மகாதேவர் ஆலயத்தில் திருவோண உற்சவ கொடி ஏற்றப்பட்டு ஓணத்தின் வரவவை முறைப்படி அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவ கொடியை ஆலய தந்திரி நாராயணன் நம்பூதிரி துவக்கி வைத்தார்.