ஒரேயொரு ஆண்டு மட்டுமே மீதமுள்ளது: காங்கிரஸ் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேச்சு


ஒரேயொரு ஆண்டு மட்டுமே மீதமுள்ளது:  காங்கிரஸ் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேச்சு
x

காங்கிரசிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது என சத்தீஷ்காரில் நடந்த கட்சியின் 85-வது மாநாட்டின் நிறைவு நாளில் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.



நவராய்ப்பூர்,


நடப்பு ஆண்டில் கர்நாடகா உள்ளிட்ட 9 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதனையொட்டி, சத்தீஷ்காரின் நவாராய்ப்பூர் நகரில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு பிப்ரவரி 24, 25 மற்றும் 26 என 3 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன்படி, கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முக்கிய உரையாற்றினார். இதனை தொடர்ந்து, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் நேற்று கூட்டத்தில் உரையாற்றினர்.

அதில், பாரத் ஜோடோ யாத்திரையுடன் தனது பணி நிறைவு பெறுகிறது என்ற வகையில் சோனியா காந்தி பேசினார். இதனால், அரசியலில் இருந்து விலகும் முடிவை அவர் வெளியிட்டு உள்ளாரா? என்றும் அரசியல் நோக்கர்கள் சூசகம் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ராய்ப்பூர் நகருக்கு விமானத்தில் வந்திறங்கினார். அவரை சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் முறைப்படி வரவேற்றார்.

இதனையொட்டி, மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை வரவேற்கும் வகையில், வழியெங்கும் பல மீட்டர் தொலைவுக்கு ரோஜா இதழ்களை தூவி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

கட்சி மாநாட்டில், அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படுகிறது.

அதேநேரம் நடப்பு ஆண்டில் நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்டவை பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

அதற்கு முன் நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் தொடக்க கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் கார்கே, சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை குறிப்பிட்டு பேசினார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை சாடிய அவர் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் அச்சுறுத்தலில் உள்ளது என தாக்கி பேசினார். இதுதவிர, பிரதமர்கள் மற்றும் கட்சி தலைவர்களாக இருந்தவர்களுக்கு கட்சியின் காரிய கமிட்டியில் நிரந்தர இடம் வழங்குவதற்கு ஏற்ப கட்சியின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நிறைவு நாளான இன்று மாநாட்டில் கலந்து கொண்டு பிரியங்கா காந்தி பேசினார். அவர் பேசும்போது, தற்போது நமக்கு ஒரேயொரு ஆண்டு மட்டுமே மீதமுள்ளது.

நாம் ஒன்று சேருவோம் என்று நம்மிடம் (எதிர்க்கட்சிகள்) இருந்து, எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வினருக்கு எதிரான கருத்துகளை கொண்டுள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

ஒவ்வொருவரிடம் இருந்தும் எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால், காங்கிரசிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது என அவர் பேசும்போது கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்ட தொண்டர்களின் போராட்டங்களை அவர் பாராட்டி பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, பா.ஜ.க.வுக்கு எதிராக போராட உங்களுக்கு தைரியம் உள்ளது என எங்களுக்கு தெரியும். அந்த தைரியம் நாட்டுக்காக வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியானது, மண்டல அளவில் கட்டி எழுப்பப்பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டும் என அவர் பேசியுள்ளார். இந்த பேச்சின்போது, கட்சியின் செய்தியை மக்களிடம் எடுத்து சென்று கூறுவதுடன், மத்திய அரசின் தோல்விகளையும் சென்று சேர்க்க வேண்டும் என தொண்டர்களை அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த மாநாட்டில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முக்கிய உரையாற்ற இருக்கிறார்.


Next Story