ரூ.2,467 கோடியில் பரந்தூர் விமான நிலையம் - மத்திய அரசு தகவல்


ரூ.2,467 கோடியில் பரந்தூர் விமான நிலையம் - மத்திய அரசு தகவல்
x

விமான நிலைய ஆணையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2-வது விமான நிலையத்துக்கு சென்னை அருகில் உள்ள பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்துள்ளது.

புதுடெல்லி,

விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்ட விவரங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. அனில் பிரசாத் ஹெக்டே மற்றும் கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. இளமாரம் கரீம் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,349 கோடிக்கு குத்தகை அடிப்படையில் 6 விமான நிலையங்கள் பொது-தனியார் கூட்டாண்மை முறையில் ஏலம் விடப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணிகள் மற்றும் புதிய விமான நிலையம் பற்றி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மந்திரி வி.கே.சிங் அளித்த பதிலில், "சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்துக்கு இட நெருக்கடி உள்ளது. இதனை விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.

இதன்படி புதிய முனையம் ரூ.2,467 கோடிக்கு அமைகிறது. இதன்மூலம் விமான நிலைய திறன் உயர்த்தப்படும். புதிய விமான நிலையத்தைப் பொறுத்தவரை ஆணையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் 2-வது விமான நிலையத்துக்கு சென்னை அருகில் உள்ள பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்துள்ளது" என கூறப்பட்டு உள்ளது.


Next Story