எதிர்க்கட்சிகள் முன் வந்தால் நாடாளுமன்ற முடக்கத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - அமித்ஷா


எதிர்க்கட்சிகள் முன் வந்தால் நாடாளுமன்ற முடக்கத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - அமித்ஷா
x

எதிர்க்கட்சிகள் முன் வந்தால் நாடாளுமன்ற முடக்கத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் முடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் முதல் 5 நாட்களும் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் நாடாளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.

இந்த முடக்கத்துக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா யோசனை தெரிவித்து உள்ளார். டெல்லியில் நடந்த 'இந்தியா டுடே' மாநாட்டில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

சபாநாயகர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

வெறும் ஆளுங்கட்சி அல்லது வெறும் எதிர்க்கட்சியால் மட்டும் நாடாளுமன்ற அமைப்பு இயங்காது. ஏனெனில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் பேச வேண்டும். எனவே நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பும் சபாநாயகர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்காக அவர்கள் (எதிர்க்கட்சி) 2 அடி முன்வந்தால், நாங்களும் 2 அடி முன்னோக்கி செல்வோம். இதன் மூலம் நாடாளுமன்றம் இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் எதையும் செய்யாமல் வெறும் செய்தியாளர் சந்திப்பு மட்டும் நடத்தினால் எந்த பலனும் இருக்காது.

நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம்

இந்த விவகாரத்தில் எங்கள் முயற்சிகள் இருந்தபோதும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான எந்த பரிந்துரையும் வரவில்லை. அப்படியிருக்க, நாங்கள் யாரிடம் பேச முடியும். அவர்கள் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் வேண்டும் என கோஷமிடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் முழுமையான பேச்சு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாடாளுமன்றத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டே விவாதங்கள் நடத்தப்படும். நீங்கள் சாலையில் பேசுவது போல நாடாளுமன்றத்தில் பேச முடியாது. இந்த அடிப்படை புரிதலே அவர்களுக்கு இல்லையென்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்?

சில பிரச்சினைகள் அரசியலுக்கு மேற்பட்டவை. இந்திரா காந்தி கூட, உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவதற்கு மறுத்தார். வெளிநாடுகளிலும், பிற நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் இந்தியா குறித்து அவதூறு பேசுவதா? இதற்கு காங்கிரஸ் பதிலளிக்கும் என நான் நம்புகிறேன்.

பாரபட்சமற்ற செயல்பாடு

சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகின்றன. ஐக்கிய முற்போக்கு ஆட்சியின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைதான் அவை விசாரித்து வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு உத்தரபிரதேச தேர்தலின்போது பேசிய காங்கிரஸ் பெண் தலைவர் ஒருவர், ஊழல் புகார்களில் விசாரணை நடத்தாதது ஏன்? என எங்களைப்பார்த்து கேள்வி எழுப்பினார். ஆனால் நடவடிக்கை எடுக்கும்போது அவர்கள் கூச்சலிடுகிறார்கள்.

தங்கள் மீதான வழக்குகளுக்கு கோர்ட்டுக்கு போவதற்கு பதிலாக, வெளியே கூச்சலிடுவது ஏன்? ஒருவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், விசாரிக்க வேண்டாமா? இப்போது நடந்து வரும் வழக்குகளில் இரண்டை தவிர மீதமுள்ள அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது போடப்பட்டவைதான்.எனவே நீங்கள் சட்டத்தை பின்பற்றுங்கள், அதுதான் ஒரே வழி. இதையே நான் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.


Next Story