நாடாளுமன்ற தேர்தல்; எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு போட்டியாக... நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்


நாடாளுமன்ற தேர்தல்; எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு போட்டியாக... நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்
x

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று பேசும்போது, கடந்த ஆண்டுகளில் பா.ஜ.க. மக்களை நன்றாக சென்றடைந்து உள்ளது. அதன் வெற்றிக்கான வாய்ப்பும் அதிகரித்து உள்ளது.

பிரதமர் மோடி அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் நேர்மறை தாக்கம் கிடைத்து உள்ளன என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.

இதில், தங்களது பலம் நிரூபிக்கப்படும் வகையில் கூட்டத்திற்கு, ஆளும் பா.ஜ.க. ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது கூட்டணியில் உள்ள மற்றும் புதிதாக கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் உள்ளிட்டவையும் பங்கேற்கும்.

சமீப வாரங்கள் மற்றும் மாதங்களில் புதிதாக கூட்டணிகளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள ஆளும் பா.ஜ.க. அதில் வெற்றியும் பெற்று உள்ளது.

அக்கட்சி கூட்டணியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியேறிய சுகேல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பார் மீண்டும் அந்த கூட்டணியில் இணைந்து உள்ளார்.

இவரை போன்று பீகாரில் மற்றொரு ஓ.பி.சி. பிரிவை சேர்ந்த சிராக் பஸ்வானையும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும்படி நட்டா கேட்டு கொண்டு உள்ளார். சிராக் பஸ்வான், முன்னாள் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் மகன் ஆவார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர்.

அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் (17, 18 ஆகிய நாட்களில்) நடைபெற உள்ளது.

இதில், கலந்து கொள்ள 26 கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதில், கட்சிகளுக்கு இடையே விரிவான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான விசயங்களில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டம் பெங்களூருவில் நாளை நடைபெற உள்ள சூழலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டமும் நாளை நடைபெற உள்ளது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறுகிறது.


Next Story