விளம்பர வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்.. மன்னிப்பு கேட்ட பதஞ்சலி


விளம்பர வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்.. மன்னிப்பு கேட்ட பதஞ்சலி
x

ராம்தேவ், பாலகிருஷ்ணா

தவறான தகவல்களுடன் விளம்பரங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாததால் பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

புதுடெல்லி:

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. சட்டத்தை மீறி செயல்படமாட்டோம் என பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் உறுதி அளித்தார். அதன்பிறகும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் வெளியாகின. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பதஞ்சலி நிறுவனம் பதில்அளிக்க கால தாமதம் ஆனது. சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததையடுத்து, பதஞ்சலி நிறுவனம் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் யோகா குரு ராம்தேவின் உதவியாளருமான பாலகிருஷ்ணா இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அதில், பதஞ்சலி தயாரிப்புகள் மற்றும் அவற்றின் மருத்துவ செயல்திறன் குறித்து நிறுவனத்தின் தவறான தகவல்களுக்காக மன்னிப்பு கோரியிருந்தார். மேலும், சட்டத்தின் ஆட்சி மீது தனக்கு அதிக மரியாதை இருப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடப்படாமல் இருப்பதை நிறுவனம் உறுதி செய்யும் என்றும் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story