பதான் பட விவகாரம்: பசுக்கள் இந்துக்களுக்கும், எருதுகள் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? பரூக் அப்துல்லா கேள்வி


பதான் பட விவகாரம்:  பசுக்கள் இந்துக்களுக்கும், எருதுகள் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? பரூக் அப்துல்லா கேள்வி
x

பசுக்கள் இந்துக்களுக்கும், எருதுகள் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? என பதான் பட விவகாரத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.


புதுடெல்லி,


நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பதான். வருகிற ஜனவரியில் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.

இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடையில் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. பாடலில் படுகவர்ச்சியுடன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், காவி நிறம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் நடிகர் ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த பரபரப்புக்கு இடையே ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் பேசும்போது, நடிகர் ஷாருக் கானின் புதிய படத்தில் காவி நிற ஆடைகளை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, காவி நிறம் இந்துக்களுக்கு உரியது மற்றும் பச்சை நிறம் என்றால் அது முஸ்லிம்களுக்கு உரிய ஒன்றா? என்ன இது? பசுக்கள் என்றால் இந்துக்களுக்கும் மற்றும் எருது என்றால் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பட விவகாரம் பற்றி பா.ஜ.க. மந்திரியான நரோட்டம் மிஷ்ரா கூறும்போது, பேஷாராம் ராங் பாடலும் எதிர்ப்புக்கு உரியது. காவி மற்றும் பச்சை நிற ஆடைகள் அணிந்துள்ள விதம், பாடலின் வண்ணம், வரிகள் மற்றும் திரைப்படத்தின் பெயரே விவகாரத்திற்கு உரியது என்று கூறினார்.

எனினும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவாதமே அடிப்படையற்றது என கூறி உள்ளனர்.


Next Story