பீலேவின் இழப்பு விளையாட்டு துறையில் ஈடுசெய்ய இயலாதது - பிரதமர் மோடி இரங்கல்


பீலேவின் இழப்பு விளையாட்டு துறையில் ஈடுசெய்ய இயலாதது - பிரதமர் மோடி இரங்கல்
x

கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பீலேவின் மறைவு விளையாட்டு உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் உலகளாவிய கால்பந்து சூப்பர் ஸ்டார், அவரது புகழ் எல்லைகளை கடந்தது. அவரது சிறப்பான விளையாட்டுகளும், சாதனைகள் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story