அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்
x

முழுமையடையாத கோவிலில் எந்த தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்ய முடியாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த போலா தாஸ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அயோத்தியில் வரும் 22-ந்தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இந்து மாதங்களில் ஒன்றான 'பவுஷ்ய' மாதத்தில் எந்த மத நிகழ்வுகளும் நடத்தப்படுவது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் கட்டுமானம் இன்னும் முழுமையடையாமல் உள்ளதாகவும், முழுமையடையாத கோவிலில் எந்த தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்ய முடியாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. இந்த விழாவை நடத்துவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story