பிஎப்ஐ முழு அடைப்பு போராட்டம்: கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்


பிஎப்ஐ முழு அடைப்பு போராட்டம்: கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்
x

கேரளாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்த முழு அடைப்பிற்கு அம்மாநில ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

இதில் கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இன்று கேரளாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என பிஎப்ஐ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இயங்கின. அதேவேளை, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ சார்பில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம், கொல்லம், பத்தம்திட்டா, ஆலப்புலா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

ஆலப்புலா, கோழிக்கோடு, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் அரசு பஸ்கள், லாரி, ஆட்டோ, கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சாலையில் சென்ற வாகனங்கள் போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை தொடர்ந்து கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வன்முறையாக மாறிய முழு அடைப்பு போராட்டம் குறித்து கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. மேலும் முழு அடைப்பு அழைப்பு விடுத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடையடைப்பு போராட்டத்திற்க முன்பே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் ஐகோர்ட்டு கூறியுள்ளது. முழு அடைப்புபோராட்டத்தற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வன்முறையை தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம் என்றும் மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story