3 பைக்கில் 14 பேர் - உத்தரபிரதேசத்தில் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை


உத்தரபிரதேசத்தில் 3 பைக்கில் 14 பேர் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பரேலி,

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சிலர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மூன்று பைக்குகளில் 14 பேர் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு பைக்கில் ஆறு பேரும் மேலும் இரண்டு பைக்குகளில் தலா நான்கு பேரும் என ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பரேலியின் தியோரானியா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சாகசத்தில் ஈடுபட்டவர்களின் பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து பரேலி மூத்த போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார் சவுராசியா கூறும்போது, சாகசத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் கிடைத்ததும், அவர்களது பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.


Next Story