ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு


ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 May 2023 9:58 PM GMT (Updated: 23 May 2023 5:03 AM GMT)

பொதுமக்கள் எந்த அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை 23-ந் தேதி (இன்று) முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளச் சான்று தேவையில்லை

இந்தநிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, அடையாள ஆவணம் தரவோ வேண்டியதில்லை என்றும் அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நோட்டுகளை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளது.

ரிட் மனு

இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அஸ்வினி குமார் உபாத்யாய் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பை தன்னிச்சையானது, நியாயமற்றது, சமத்துவ உரிமைக்கு எதிரானது, செயல்படுத்துக்கூடாது என அறிவிக்க வேண்டும்.

கருப்புபணத்தை மாற்றுவதை தடுக்கவும், வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை கண்டறியவும், கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் மட்டுமே ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கிக்கும், பாரத ஸ்டேட் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும் என அந்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.


Next Story