'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி தேர்தலுக்கு பிறகு முடிவு - சீதாராம் யெச்சூரி தகவல்


இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி தேர்தலுக்கு பிறகு முடிவு - சீதாராம் யெச்சூரி தகவல்
x

'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.

பாட்னா,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணியில் தங்கள் கட்சி இடம் பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பீகார் மாநிலம் பீகார்ஷெரீப் மாவட்டம் ராஜ்கிர் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளிடையே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார். அவர் பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்கான 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணி கட்சிகளிடையே எந்த சர்ச்சையோ, கருத்து வேறுபாடோ இல்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் கருத்தொற்றுமையுடன் உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்தன. பிறகுதான் மன்மோகன்சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தற்போதைய ஒரே இலக்கு, பா.ஜ.கவை தோற்கடிப்பதுதான். மதச்சார்பற்ற ஓட்டுகளின் பிளவால் பா.ஜ.க பலன் அடைவதை அனுமதிக்க மாட்டோம். உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை பா.ஜ.க திசைதிருப்புகிறது. எனவே, இந்த நேரத்தில், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை தீவிரமாக எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story