இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!


இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
x

இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி (88) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவர் தனது சகோதரர் உடன் குஜராத்தின் ஜாம்நகரில் வசித்து வந்தார். 1960 முதல் 1973-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், 1,202 ரன்கள், 74 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

சலீம் துரானி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரவிசாஸ்திரி, விவிஎஸ் லஷ்மண் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சலீம் துரானி ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். கிரிக்கெட் உலகில் இந்தியாவின் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றினார். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் தனது ஸ்டைலுக்கு பெயர் பெற்றவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

சலீம் துரானி ஜி குஜராத்துடன் மிகவும் பழமையான மற்றும் வலுவான தொடர்பு கொண்டிருந்தார். சௌராஷ்டிரா மற்றும் குஜராத் அணிக்காக சில ஆண்டுகள் விளையாடினார். குஜராத்தையும் தனது இல்லமாக்கினார். அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மற்றும் அவரது பன்முக ஆளுமையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story