முலாயம் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி


முலாயம் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
x

முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

புதுடெல்லி,

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், முலாயம் சிங் யாதவ் (வயது 82). சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான இவர் மத்திய ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தவர். தற்போது நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக உள்ளார். பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நுரையீரல் தொற்றினால் அவதிப்படுகிற அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, அவரது உயிரைக்காப்பாற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் நிதின் சூத், சுஷில் கட்டாரியா தலைமையில் டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

இந்தநிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளதாக அகிலேஷிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் அகிலேஷ் யாதவிடம் பேசி, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை அழைத்து, முலாயம் சிங்கிற்க்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக உ.பி., அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story