நமீபியாவில் இருந்து கொண்டு வரப்படும் 8 சிறுத்தைகள் - குணோ தேசிய பூங்காவில் இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி


நமீபியாவில் இருந்து கொண்டு வரப்படும் 8 சிறுத்தைகள் - குணோ தேசிய பூங்காவில் இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 17 Sep 2022 1:26 AM GMT (Updated: 17 Sep 2022 2:13 AM GMT)

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்படும் 8 சிறுத்தைகளை இன்று மத்தியபிரதேச உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

புதுடெல்லி,

இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதே நேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்கியது. 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்படுகிறது.

ஜெய்ப்பூருக்கு வரும் இந்த சிறுத்தைகள் பின்னர் அங்கு இருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று விடுவிக்கிறார்.


Next Story