இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி - அடுத்த திட்டங்கள் குறித்து ஆலோசனை


இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி - அடுத்த திட்டங்கள் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 25 Aug 2023 10:38 PM GMT (Updated: 26 Aug 2023 1:53 AM GMT)

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு வித்திட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பெங்களூருவில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பாராட்டுகிறார்.

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி இருந்தது. கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி பெரும் சாதனை படைத்திருந்தது. லேண்டரில் இருந்து ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கான கட்டளையிடும் பணிகள் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு அருகே பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தரைக்கட்டுப்பாடு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலவில் இந்தியா காலூன்றிய சரித்திர சாதனையை தொடர்ந்து அன்றைய தினமே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். நாடு முழுவதும் உள்ள மக்கள் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பீனியாவில் உள்ள இஸ்ரோ நிறுவனத்திற்கு சென்று விஞ்ஞானிகளை நேரில் பாராட்டி கவுரவப்படுத்தி இருந்தார்கள்.

இந்த நிலையில், சந்திரயான்-3 வெற்றி பெற்றிருப்பதுடன், நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரை இறங்கி சாதனை படைத்துள்ளதால் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருந்தார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) நாடு திரும்புகிறார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். காலை 5.55 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு அவர் வருகிறார். அங்கு வைத்து கர்நாடக பா.ஜனதா தலைவர்கள், பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். காலை 6.30 மணிவரை விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி ஓய்வெடுக்க உள்ளார்.

பின்னர் காலை 6.30 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பீனியாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். காலை 7 மணியளவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றிக்கு வித்திட்ட விஞ்ஞானிகளை சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவிக்க உள்ளார். இஸ்ரோ மையத்திலேயே ஒரு மணிநேரம் அவர் இருக்கிறார். அந்த ஒரு மணி நேரமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

சந்திரயான்-3 திட்டம் வெற்றி குறித்தும், இஸ்ரோவின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு, இஸ்ரோ மையத்தில் இருந்து காலை 8 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாகவே அவர் வர உள்ளார். பின்னர் காலை 8.35 மணியளவில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பீனியாவில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தை சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி பெங்களூரு நகரில் அதிகாலை 4 மணியளவில் இருந்து காலை 9.30 மணிவரை முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Next Story