சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்: 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி


சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்: 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
x

சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு,

தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூருவில் தொடங்கி வைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார். அதன் பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் அன்றைய தினம் பிரதமர் மோடி இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் சென்னை - மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

திண்டுக்கல் வருகிறார்

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வந்து பட்டமளிப்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


Next Story