காந்தி ஜெயந்தி தினத்தில் ரூ.1½ கோடி கதர் விற்பனைக்கு பிரதமர் மோடி பாராட்டு


காந்தி ஜெயந்தி தினத்தில் ரூ.1½ கோடி கதர் விற்பனைக்கு பிரதமர் மோடி பாராட்டு
x

காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லியில் உள்ள காதி பவனில் ரூ.1½ கோடி மதிப்புள்ள கதர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந் தேதி, கதர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, டெல்லியில் கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள காதி பவனில் காந்தி ஜெயந்தி தினத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள கதர் மற்றும் கிராம தொழில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, சாதனை அளவாகும்.

இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கதர் பொருட்கள் விற்பனையில் படைக்கப்பட்டுள்ள சாதனை, கதர் மீதான பொதுமக்கள் உணர்வுகளின் வலிமையான அடையாளத்தை காட்டுகிறது. மக்களுக்கு பிடித்திருப்பதால், கதர் விற்பனை தொடர்ந்து புதிய சாதனைகள் படைக்கும் என்று நம்புகிறேன்.

அத்துடன், 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையை இது வலுப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரிசபை முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இம்முடிவு, கோடிக்கணக்கான மஞ்சள் விவசாயிகளுக்கு பயன் அளிப்பதுடன், அவர்களுக்கு நல்ல சந்தையை உறுதி செய்யவும், சிறப்பான வாழ்வு அமையவும் பயன்படும்.

தெலுங்கானா மாநிலத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இது, தெலுங்கானா இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதாக அமையும்.

பழங்குடியினர் கலாசாரத்தை ஆழமாக புரிந்துகொள்ள உதவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story