கேரளா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்


கேரளா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
x

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சொகுசு படகில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சொகுசு படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

முன்னதாக படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story