புதுச்சேரி சிறுமி சம்பவம்; எவ்வளவு காலம் மவுனம் காக்க போகிறோம்? பிரபல நடிகை பதிவு


புதுச்சேரி சிறுமி சம்பவம்; எவ்வளவு காலம் மவுனம் காக்க போகிறோம்? பிரபல நடிகை பதிவு
x

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனையை தருகிறது என பிரபல நடிகை பதிவிட்டு உள்ளார்.

சென்னை,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள்.

இந்த நிலையில் மாயமான சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் சாக்கடை கால்வாயில் இருந்து, வேட்டியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடைக்குள் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், கருணாஸ் (19) என்ற இளைஞரும், விவேகானந்தன் (59) என்ற முதியவரும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா போதையில் ஐஸ்கீரிம் கொடுத்து சிறுமியை கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிறுமி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரபல நடிகை சோனா ஹைடன் பதிவிட்டு உள்ளார். அந்த பதிவில், மார்ச் 8-ம் தேதி பெண்களை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம். ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா?

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனையை தருகிறது.

ஒரு பெண்ணாக இருப்பதென்றால் என்னவென்று கூட அறியாத வயதுள்ள குழந்தையை இப்படி சிதைத்திருப்பது, நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை தருகிறது. இந்த அவமானகரமான சம்பவம் நம்முடன் மிருகங்களும் வசிப்பதையே காட்டுகின்றது.

நான் நடிகை, திரைபிரபலம் என்றாலும் நானும் என் சக ஊழியர்களும் கூட இதுபோன்ற காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை எதிர்கொண்டு மீண்டிருக்கிறோம் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

இதுபோன்ற மிருகங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பெண்களான நாங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். அது தீராத, முடிவடையாத ஓட்டமாகவே இருக்கிறது. வளர்ந்த சமூகத்திலும் பெண்கள் அடக்கப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும் தவறான முத்திரை குத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஏன் என்கிற கேள்விக்கு எங்கும் பதிலில்லை.

இன்னும் எவ்வளவு காலம் மவுனம் காக்க போகிறோம்? நாம் குரல் கொடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு பேரச்சம் ஏற்படும் வகையில் பெருங்குரலாக அது இருக்க வேண்டும்.

புதுச்சேரியில் நடந்த அக்கொடுமையை வன்மையாக கண்டிப்பதுடன் எனது ஆழ்ந்த இரங்கலை அந்தச்சிறுமியின் குடும்பத்துக்கு தெரிவித்து கொள்கிறேன். அந்த பிஞ்சு நெஞ்சின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.


Next Story