பஞ்சாப்; பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு; செங்கற்களால் தாக்கி ஒருவர் கொலை


பஞ்சாப்; பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு; செங்கற்களால் தாக்கி ஒருவர் கொலை
x
தினத்தந்தி 21 Aug 2023 10:24 AM GMT (Updated: 21 Aug 2023 12:08 PM GMT)

பக்கத்து வீட்டுக்காரருடன் எற்பட்ட தகராறில் செங்கற்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் உள்ள தனன்சு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோக் சிங். இவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் இவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டின் சுவரை சரிசெய்யும் வேலையில் ஈடுபட்டபோது அதிலிருந்து விழும் குப்பைகள் சந்தோக் வீட்டின் வளாகத்தில் விழுந்தன.

இது குறித்து இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் சந்தோக் சிங்கை செங்கற்களால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்தோக் சிங்கை அவருடைய மகன் ஜஸ்வந்த் சிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இது குறித்து அவருடைய மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பக்கத்து வீட்டுக்காரர் போதைப்பொருள் கடத்தும் தொழிலில் ஈடுபட்டார். அதனை தடுக்கும் வகையில் என்னுடைய தந்தை செயல்பட்டார். இது அவருக்கு என் தந்தை மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதற்கு பழிவாங்கும் வகையில் அவர் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார் என கூறியுள்ளார்.

காவலர்கள் இந்த கொலை வழக்கில் சம்பந்தபட்டவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து அவரை கைது செய்ய சென்றனர். இதனை அறிந்த குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பி ஓடினார். காவலர்கள் அவரை கைது செய்யும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story