ராகுல் காந்தி விவகாரம்: சத்தீஷ்காரில் காங்கிரஸ் பேரணியில் திடீரென சரிந்த மேடை; பரபரப்பு வீடியோ


ராகுல் காந்தி விவகாரம்:  சத்தீஷ்காரில் காங்கிரஸ் பேரணியில் திடீரென சரிந்த மேடை; பரபரப்பு வீடியோ
x
தினத்தந்தி 3 April 2023 8:04 AM GMT (Updated: 3 April 2023 8:11 AM GMT)

ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தில் சத்தீஷ்காரில் நடந்த காங்கிரஸ் பேரணியில் திடீரென மேடை சரிந்து விழுந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

ராய்ப்பூர்,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது.

எனினும், கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து உள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்து உள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்தி மீது பதிவாகி உள்ளது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக, சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக கட்சிக்காரர்கள் அமரும் வகையில் மேடை ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென மேடை சரிந்து விழுந்தது. மேடையில் இருந்த ஆண், பெண் உறுப்பினர்கள் கீழே விழுந்தனர். எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story