காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியே ஒரு கெட்ட சகுனம்; பா.ஜ.க. கடும் தாக்கு


காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியே ஒரு கெட்ட சகுனம்; பா.ஜ.க. கடும் தாக்கு
x

காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி முன்வந்ததில் இருந்து, அக்கட்சி தொடர்ந்து மூழ்கி கொண்டிருக்கிறது என்று விஜ் கூறியுள்ளார்.

சண்டிகார்,

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடி பிரச்சனைகளை திசை திருப்ப முயல்கிறார்.

அவர் தொலைக்காட்சியில் தோன்றி, இந்து-முஸ்லிம் என கூறுகிறார். சில சமயங்களில் கிரிக்கெட் போட்டியை காண போகிறார். உலக கோப்பையை நமது வீரர்கள் வென்றிருக்க கூடும்.

ஆனால், கெட்ட சகுனத்தினால், போட்டியில் தோல்வி அடைந்தோம் என பேசினார். பி.எம். என்றால் பனாடி மோடி (பனாடி என்றால் தீய சகுனம் என்று அர்த்தம்) என கூறினார். அவருடைய இந்த பேச்சுக்கு, பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, நம்பிக்கையின்மை மற்றும் மனவுறுதியற்ற நிலை ஆகியவற்றின் அடையாளங்களாக அவருடைய பேச்சு அமைந்துள்ளது. 55 வயது கொண்ட ராகுல் காந்தி அவருடைய வாழ்க்கையில் ஒரு நாள் கூட உழைத்தது இல்லை.

அந்த குடும்பம் ஒட்டுண்ணிகளாக இருந்து நாட்டை சுரண்டும் செயலில் ஈடுபட்டது. அவர்களின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அழிந்து போனது என சாடினார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு பதிலடி தரும் வகையில் அரியானாவின் உள்துறை மந்திரி மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான அனில் விஜ் இன்று கூறும்போது, கிரிக்கெட் என்பது ஒரு போட்டி. யார் வேண்டுமென்றாலும் வெற்றி பெறலாம். தோல்வியும் அடையலாம். இது விளையாட்டுக்கான மனநிலையுடன் எடுத்து கொள்ளப்பட வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியே ஒரு கெட்ட சகுனம். காங்கிரசின் தலைவராக அவர் முன்வந்ததில் இருந்து, அக்கட்சி தொடர்ந்து மூழ்கி கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி இகழ கூடிய ஒன்றின் உச்சம் தொட்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சியினர் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கொண்டிருக்கின்றனர். ஆனால், 10 ஆண்டுகளில் அவர்களுடைய அமைப்பு உருவாக்கப்பட்டு நாங்கள் பார்க்கவில்லை.

பா.ஜ.க.வோ, தேசிய தலைவர் முதல் மாநில தலைவர், மாவட்ட தலைவர் மற்றும் மண்டல தலைவர் வரை எல்லா மட்டங்களிலும் உள்ளது. வீடு, வீடாக சென்று கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்க கூடிய பிரமுகர்களையும் (பன்னா பிரமுக்) பா.ஜ.க. கொண்டுள்ளது.

இதுவரை அரியானாவில் பன்னா பிரமுக்கிற்கான 70 பா.ஜ.க. கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. வருகிற 26-ந்தேதி மற்றொரு கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story