மல்யுத்த வீரர்களுடன் ராகுல்காந்தி சந்திப்பு...!


மல்யுத்த வீரர்களுடன் ராகுல்காந்தி சந்திப்பு...!
x
தினத்தந்தி 27 Dec 2023 5:36 AM GMT (Updated: 27 Dec 2023 5:38 AM GMT)

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

டெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் விலகினார்.

இதனை தொடந்து நடைபெற்ற இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்று புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய மல்யுத்த சங்கத்தை இடைநீக்கம் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்திய மல்யுத்த சங்கத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் குழு அமைக்க உள்ளது.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்தார். அரியானா மாநிலம் சகாரா கிராமத்திற்கு சென்ற ராகுல்காந்தி, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, தீபக் பூனியா உள்ளிட்டோரை சந்தித்தார். சகாரா, பஜ்ரங் பூனியாவின் சொந்த கிராமமாகும். அதிகாலை அங்கு சென்ற ராகுல்காந்தி மல்யுத்த வீரர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மல்யுத்த வீரர்களுக்கு தனது ஆதரவை ராகுல்காந்தி தெரிவித்தார்.


Next Story