காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி


காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி
x
தினத்தந்தி 12 Aug 2023 3:14 AM GMT (Updated: 12 Aug 2023 5:30 AM GMT)

காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

ஜம்மு,

75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வீடுகள்தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடியுடன் 'செல்பி' எடுத்து மத்திய அரசின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்ற பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 400 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடியுடன் மக்கள் பேரணி சென்றனர். ராணுவம் மற்றும் போலீசார் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் மாணவர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தலைநகர் டெல்லியில் எம்.பி.க்கள் தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிள்களில் பேரணி சென்றனர். அவர்களுடன் ஏராளமான பொதுமக்களும் பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஜி கிஷன் ரெட்டி, அனுராக் தாக்கூர், பியூஷ் கோயல், மீனாட்சி லேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரகதி மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி இந்தியா கேட் வட்டம் வழியாக மேஜர் தியான் சந்த் மைதானத்தில் முடிவடைந்தது.

முன்னதாக பேரணியை தொடங்கி வைத்து பேசியஜெகதீப் தன்கர், " தேசிய கொடிக்கு மரியாதை அளிக்கும் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது மறக்க முடியாத நிகழ்வு. மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினர் வசிக்கும் பூமியின் மிகப்பெரிய ஜனநாயகம், முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது என்பதை உணர வைக்கும் ஒரு சந்தர்ப்பம் இது. நமது எழுச்சி தடுக்க முடியாதது" என கூறினார்.


Next Story