ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: முஸ்லிம்களை வீட்டிலேயே இருக்க கூறிய அஜ்மலுக்கு பா.ஜ.க. பதிலடி


ராமர் கோவில் கும்பாபிஷேக விழா:  முஸ்லிம்களை வீட்டிலேயே இருக்க கூறிய அஜ்மலுக்கு பா.ஜ.க. பதிலடி
x
தினத்தந்தி 7 Jan 2024 5:29 AM GMT (Updated: 7 Jan 2024 5:56 AM GMT)

அயோத்தி நிலம் பற்றிய வழக்கில், முன்னாள் மனுதாரரான இக்பால் அன்சாரிக்கு, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் எழுப்பப்பட்டு வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்கி நடைபெறும். இதனை முன்னிட்டு விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாமில் பார்பெட்டா நகரில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான பத்ருதீன் அஜ்மல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜனவரி 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை முஸ்லிம்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

ராமஜென்ம பூமியில் நிறுவப்படும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும். லட்சக்கணக்கான மக்கள் பஸ்களிலும், ரெயில்களிலும், விமானங்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் மேற்கொள்வார்கள். நாம் அமைதி காக்க வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக, நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் இந்த காலகட்டத்தில் ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

இந்த காலகட்டத்தில், நாம் பயணம் செய்யாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும். பா.ஜ.க. பெரிய திட்டங்களை வைத்திருக்கிறது. முஸ்லிம்களின் பெரிய எதிரியாக பா.ஜ.க. உள்ளது. நம்முடைய வாழ்க்கை, நம்பிக்கை, மசூதிகள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆசன் ஆகியவற்றுக்கு எதிரியாக உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறும்போது, முஸ்லிம்களை பா.ஜ.க. வெறுப்பதில்லை. அனைவரையும் உள்ளடக்கிய கூட்டு முயற்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்ற மந்திரத்தின் அடிப்படையில் பா.ஜ.க. பணியாற்றி வருகிறது. அயோத்தி நிலம் பற்றிய வழக்கில், முன்னாள் மனுதாரரான இக்பால் அன்சாரிக்கு, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். பத்ருதீன் அஜ்மல் மற்றும் ஓவைசி போன்றவர்கள் சமூகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர். பா.ஜ.க., அனைத்து மதங்களையும் மதிக்கிறது என்று கூறியுள்ளார்.


Next Story