சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக, ஆந்திர பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞரை பதவி உயர்த்த பரிந்துரை


சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக, ஆந்திர பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞரை பதவி உயர்த்த பரிந்துரை
x

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆகிய இருவரை பதவி உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளுக்கான மொத்தமுள்ள 34 பணியிடங்களில் தற்போது 32 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. அவர்களை கொண்டு நீதிமன்றம் இயங்கி வருகிறது. நீதிபதிகளுக்கான மீதி 2 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இந்த நிலையில், அந்த பதவிகளுக்கு நீதிபதிகளாக பணியமர்த்த சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் அமைப்பு 2 பேரை பரிந்துரை செய்து உள்ளது. இதன்படி, ஆந்திர பிரதேசத்தின் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான பிரசாந்த் குமார் மிஷ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞரான கே.வி. விஸ்வநாதன் ஆகிய இருவரை நீதிபதிகளாக பதவி உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இவற்றில், நீதிபதி ஜாம்ஷெட் பர்ஜோர் பர்திவாலா 2030-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் அந்த பணியிடத்திற்கு மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் வருவார்.

அதன்பின் அவர் ஓய்வு பெறும் நாளான 2031-ம் ஆண்டு மே 25-ந்தேதி வரை அந்த பதவியை வகித்திடுவார் என கொலீஜியம் தெரிவிக்கின்றது.

இதனை இந்திய தலைமை நீதிபதி தனஞ்ஜெயா ஒய். சந்திரசூடு மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரைக்கான இந்த முடிவை எடுத்து உள்ளனர்.

எனினும், ஜூலை 2-வது வாரத்தில் 4 காலி பணியிடங்கள் ஏற்பட கூடிய சூழலில், சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக குறையும் என்று கூறப்படுகிறது.


Next Story