ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் ரஷிய வெளியுறவு மந்திரி


ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் ரஷிய வெளியுறவு மந்திரி
x

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி இந்தியா வந்தடைந்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இதில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேச கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் நள்ளிரவு தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நாவின்பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை துணைச் செயலாளர் லீ ஜுன்ஹுவா புதுடெல்லி வந்தடைந்தார்.


Next Story