சபரிமலை: பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை - சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு


சபரிமலை: பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை - சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு
x

சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை நடத்தியதாக சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையின்போது, மகர ஜோதி தோன்றும் இடமான பொன்னம்பல மேடு புனிதமான இடமாக கருதப்படுகிறது. இந்தநிலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பொன்னம்பல மேட்டில் ஒருவர் சட்டவிரோதமாக நுழைந்து சிறப்பு பூஜை நடத்தியதாக தெரிகிறது.

இதை சிலர் வீடியோ எடுத்து, தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் சபரிமலை சன்னிதானம் அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சிறப்பு பூஜை செய்தது சென்னையை சேர்ந்த நாராயணன் என்ற நாராயண சாமி (வயது 56) என்பது தெரியவந்தது.

இவர் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கீழ் சாந்தியின்(தந்திரி) உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றி வந்து உள்ளார். அப்போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதாவது சிறப்பு பூஜைகள் நடப்பதாக தேவசம்போர்டு பெயரில் போலியாக ரசீதுகளை அச்சிட்டு பக்தர்களை ஏமாற்றி விற்பனை செய்து முறைகேடு செய்து உள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. பொன்னம்பலமேட்டில் அத்துமீறி பூஜை செய்தது தொடர்பாக நாராயணன் மீது பச்சைகாணம் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story