டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16ம் தேதி டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோர்ட்டில் இந்த வழக்கை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து கவிதாவை வரும் 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவிட்டார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ், பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கவிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் பெற விசாரணை கோர்ட்டை நாடுமாறு அறிவுறுத்தினர். அதுதான் வழக்கமான நடைமுறை என்றும் அதை சுப்ரீம் கோர்ட்டு மீற முடியாது என்றும் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Next Story