அதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


அதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 3 Jan 2024 5:36 AM GMT (Updated: 3 Jan 2024 6:13 AM GMT)

புகார்களின் மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை உயர்த்தியதாக குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து, அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது. இதில் புகார்கள் மீதான விசாரணையை செபி அமைப்பே விசாரிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பில், அதானி குழுமம் மீது வந்த 22 புகார்களில் 20 புகார்களின் மீதான விசாரணையை செபி அமைப்பு முடித்துள்ளது. எனவே விசாரணையை சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான எந்தவித அடிப்படை காரணமும் இல்லை. செபியின் அதிகார வரம்பில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். மேலும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்று மட்டுமே நீதிமன்றம் விசாரணை செய்ய முடியும். எனவே புகார்கள் மீதான விசாரணையை செபி அமைப்பே விசாரிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மீதம் உள்ள 2 புகார்களின் மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story