காங்கிரஸ் குடும்பக் கட்சியாகிவிட்டதால் மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகுகின்றனர்- ஜேபி நட்டா
காங்கிரஸில் இருந்து அதன் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சமீபத்தில் விலகினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் குடும்பக் கட்சியாகிவிட்டதால் அதனை விட்டு மூத்த தலைவர்கள் வெளியேறுவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விமர்சித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து அதன் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகினார். இந்த நிலையில் அவரின் பெயரைக் குறிப்பிடாமல் நட்டா மறைமுகமாக பேசியுள்ளார்.
இது குறித்து இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தொண்டர்கள் மத்தியில் நட்டா பேசுகையில், "காங்கிரஸில் 40-50 ஆண்டுகால தொடர்பில் இருந்த மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். காங்கிரஸ் இப்போது ஒரு தேசியக் கட்சி இல்லை என்பதை அவர்கள் உணர்ந்ததால் தான் வெளியேறுகிறார்கள். காங்கிரஸ் குடும்பக் கட்சியாக மாறிவிட்டது" என விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பாஜக ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களால் நடத்தப்படவில்லை, அது சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அதனால்தான் அதை யாராலும் தடுக்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.