அக்னிவீரர்களின் பதவி காலம் முடிந்ததும் போலீசில் பணி; கர்நாடக உள்துறை மந்திரி


அக்னிவீரர்களின் பதவி காலம் முடிந்ததும் போலீசில் பணி; கர்நாடக உள்துறை மந்திரி
x

அக்னிவீரர்களின் பதவி காலம் முடிந்ததும் மாநில போலீசில் பணி அமர்த்தப்படுவார்கள் என கர்நாடக உள்துறை மந்திரி இன்று கூறியுள்ளார்.



பெங்களூரு,



முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 14ந்தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின்படி தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.

எனினும், அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இந்த 10% இடஒதுக்கீடானது, இந்திய கடலோர காவல் படை மற்றும் பாதுகாப்பு நிலைகள் மற்றும் அனைத்து 16 வகையான பாதுகாப்பு பொது துறை பணிகளிலும் அமல்படுத்தப்படும். தற்போது பாதுகாப்பு படையினருக்கு நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டுடன் கூடுதலாக இந்த இடஒதுக்கீடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சேவைகளை அமல்படுத்துவதற்காக, தொடர்புடைய ஆள்சேர்ப்பு விதிகளில் வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் தெரிவித்து உள்ளது. தேவையான வயது தளர்வு பிரிவும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க.வில் உள்துறை மந்திரியாக உள்ள அரக ஞானேந்திரா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்தின் கீழ் சேர்ந்து பணியாற்றி பதவி காலம் நிறைவு பெறும் அக்னிவீரர்கள் மாநில போலீசில் பணி அமர்த்தப்படுவார்கள் என கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நடந்து வரும் போராட்டங்களுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story