சத்தீஷ்காரில் அதிர்ச்சி: ஆசிரமத்தில் சிறுமியை அடித்து, எரியும் கட்டையை வாயில் வைத்த 3 சீடர்கள்


சத்தீஷ்காரில் அதிர்ச்சி: ஆசிரமத்தில் சிறுமியை அடித்து, எரியும் கட்டையை வாயில் வைத்த 3 சீடர்கள்
x

சத்தீஷ்காரில் ஆசிரமம் ஒன்றில் பேய் ஓட்டுவதற்கு அழைத்து வந்த சிறுமியை அடித்து, எரியும் கட்டையை 3 சீடர்கள் வாயில் வைத்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.


ராய்ப்பூர்,


சத்தீஷ்காரின் மகாசாமுண்ட் மாவட்டத்தில் பதேராபலி கிராமத்தில் பாக்பாஹ்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று உள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் அபான்பூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, பேய் ஓட்ட வேண்டும் என கூறி கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரமத்திற்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில், அந்த சிறுமி தங்களுக்கு வழங்கிய பாயசத்தில் விஷம் கலந்து விட்டது என குற்றச்சாட்டு கூறி ஆசிரம நிர்வாகியான குரு மற்றும் அவரது சீடர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் சேர்ந்து சிறுமியை கடுமையாக அடித்து, தாக்கி உள்ளனர்.

அந்த சிறுமியின் வாயில் எரியும் மர கட்டையை உள்ளே திணித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சிறுமியின் சகோதரர் போலீசில் புகார் அளித்து உள்ளார். சிறுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அந்த ஆசிரமத்தில் தொடர்ந்து நிறைய பேர், பேய் ஓட்ட வேண்டும் என கூறி வருவது தெரிந்து உள்ளது என மஹாசாமுண்ட் எஸ்.பி. கூறியுள்ளார்.

ஆசிரமத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. ஆசிரமம், அதன் நிலம் மற்றும் ஆசிரம செயல்பாடுகள் உள்ளிட்ட பிற விவரங்களை பற்றி மாநில வருவாய் துறையும் கேட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஆசிரம நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story