ஷ்ரத்தா வாக்கர் கதி நடிகை ஸ்வரா பாஸ்கருக்கும் ஏற்படும்; சாத்வி பிராச்சி எச்சரிக்கை


ஷ்ரத்தா வாக்கர் கதி நடிகை ஸ்வரா பாஸ்கருக்கும் ஏற்படும்; சாத்வி பிராச்சி எச்சரிக்கை
x

கலப்பு திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு ஷ்ரத்தா வாக்கர் கதி ஏற்படும் என சாத்வி பிராச்சி எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தி திரையுலகின் பிரபல நடிகையான ஸ்வரா பாஸ்கர், தனது நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை காதலித்து, ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கலப்பு திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு ஷ்ரத்தா வாக்கர் கதி ஏற்படும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

அவர் கூறும்போது, ஷ்ரத்தா வாக்கரின் உடல் எப்படி 35 துண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்டது என்ற செய்தியில் ஸ்வரா பாஸ்கர் கவனம் செலுத்தவில்லை என தெரிகிறது.

இதுபோன்ற ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு முன்பு, ஸ்வரா ஒரு முறை அந்த பிரிட்ஜை பார்த்து இருக்க வேண்டும். அது அவரது தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் கூறுவதற்கு வேறெதுவும் இல்லை.

ஆனால், ஷ்ரத்தா வாக்கருக்கு ஏற்பட்டது போன்று ஸ்வராவுக்கும் ஏற்படலாம் என அவர் அந்த வீடியோவில் எச்சரிக்கை விடும் வகையில் நிருபர்களின் கேள்விக்கு பதிலாக கூறுகிறார்.

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர் என்பவர் தனது நீண்டநாள் காதலரான அப்தாப் பூனாவாலா என்பவரை காதலித்து வந்த நிலையில், 35 துண்டுகளாக ஆக்கப்பட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அவரது உடல் பாகங்கள் வீசப்பட்டன.

கொடூர முறையில் நடந்த இந்த சம்பவத்தில் அப்தாப் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தி திரையுலகில் ஆரம்ப காலத்தில் துணை வேடங்களில் நடித்து, பின்னர் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஸ்வரா பாஸ்கர். 2009-ம் ஆண்டில் திரை துறையில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி பின்னர், நடிகர் மாதவனின் தனு வெட்ஸ் மனு படத்தில் மணமகளாக துணை வேடமேற்று நடித்து புகழ் பெற்றார்.

நடிகர் தனுஷின் ராஞ்சனா படத்திலும் நடித்து உள்ளார். வலைதள தொடரிலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்த அவர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.

திரை துறையில் தனது ஆரம்ப நாட்களில் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்த 4 வயது குழந்தை நட்சத்திரம் தன்னை ஆண்டி என அழைத்ததற்காக ஆத்திரமடைந்த ஸ்வரா பாஸ்கர் குழந்தையை கடுமையாக, தகாத வார்த்தைகளால் திட்டியது பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்காக நெட்டிசன்கள், நடிகையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அப்போது ஸ்வரா ஆண்டி என்ற ஹேஷ்டேக்கும் பிரபலமடைந்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ந்தேதி ஸ்வரா பாஸ்கர் திருமணம் செய்து கொண்டார். ரகசியம் காக்கப்பட்ட இந்த திருமண நிகழ்வு பற்றி கடந்த 16-ந்தேதி அவர் வெளியுலகிற்கு தெரிவித்து உள்ளார்.

தனது நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை ஸ்வரா பாஸ்கர் காதலித்து, ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

பகத் அகமதுவுடன் ஏற்பட்ட அறிமுகம் முதல் திருமணம் நடந்தது வரையிலான இந்த தம்பதியின் புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

அந்த பதிவில், நாங்கள் அன்பை தேடி கொண்டிருந்தோம். முதலில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலில் முடிந்தது. இந்த பயணத்தில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். என் இதயத்துக்குள் பகத் ஜிரார் அகமதுவை வரவேற்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.

ஒரு போராட்ட களத்திலேயே தங்களது காதல் தொடங்கியது என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. காலிப் என்ற ஒரு பூனையே தங்களை ஒன்று சேர்த்தது என கூறியுள்ளார்.

சிறப்பு திருமண சட்ட பிரிவு, 1954-ன் கீழ் தங்களது திருமணம் நடந்து உள்ளது என்றும் எப்போதும் முன்னோக்கியே செல்வோம் என்றும் அதில் தெரிவித்து உள்ளார். திருமணம் நடந்ததற்கான அடையாளங்களில் ஒன்றாக மோதிரம் அணிந்த விரலையும் ஸ்வரா பாஸ்கர் காண்பித்து உள்ளார்.




Next Story