3 மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குறைகளை கேட்டறிந்த சித்தராமையா


3 மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குறைகளை கேட்டறிந்த சித்தராமையா
x

பெங்களூரு உள்பட 3 மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பெங்களூரு:-

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மந்திரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் புகார்கள் கூறினர். தங்களை மதிப்பது இல்லை என்றும், தங்களின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது இல்லை என்றும் அவர்கள் கூறினர். அவர்களை சமாதானப்படுத்திய முதல்-மந்திரி சித்தராமையா, அவர்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

அதன்படி அவர் மாவட்டம் வாரியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நடத்தி வருகிறார். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை அவர் நடத்தி முடித்துள்ளார். இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, நேற்று பெங்களூரு நகர மாவட்டம், தட்சிண கன்னடா, கோலார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நடந்தது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல்

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் என்ன என்பதை சித்தராமையா கேட்டு அறிந்தார். அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். பின்னர் அனைவரும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும், இதற்காக கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் சித்தராமையா கேட்டுக் கொண்டார். அதற்கு எம்.எல்.ஏ.க்கள் பலரும் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story