முடிவுக்கு வந்த இழுபறி;கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா-காங்.அதிகாரப்பூர்வ அறிவிப்பு


முடிவுக்கு வந்த இழுபறி;கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா-காங்.அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 18 May 2023 6:48 AM GMT (Updated: 18 May 2023 8:00 AM GMT)

கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடாகாவில் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இருவரையும் கட்சி மேலிடம் அழைத்து பேசியது 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில், இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும் துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பெங்களூரில் இன்று இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது. பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் காங்கிரஸின் சொத்து என்றும் காங்கிரஸ், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி; கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் முதல் மந்திரி மற்றும் துணை முதல் மந்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

முடிவுக்கு வந்த இழுபறி- இதுவரை நடந்தது என்ன?

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த மறுநாளே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோரின் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர்கள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் தனித்தனியாக கருத்துகளை கேட்டு அறிந்தனர். யாரை முதல்-மந்திரி ஆக்கலாம் என்று அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். அந்த கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரித்த மேலிட பார்வையாளர்கள், கடந்த 15-ந் தேதி டெல்லி புறப்பட்டு சென்றனர்.

கார்கேவுடன் ஆலோசனை

அந்த அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தாக்கல் செய்தனர். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு கிடைத்தது. இதையடுத்து மேலிடத்தின் அழைப்பின் பேரில் சித்தராமையா அன்றைய தினம் மதியம் டெல்லி புறப்பட்டு சென்றார். உடல்நலக்குறைவு காரணமாக ஒரு நாள் தாமதமாக டி.கே.சிவக்குமார் டெல்லிக்கு சென்றார்.நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசினர். டி.கே.சிவக்குமார், தான் கஷ்டப்பட்டு கட்சியை பலப்படுத்தி வெற்றி பெற வைத்ததாகவும், அதனால் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறினார். ஒருவேளை முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டால் ஆட்சியில் தான் பங்கேற்க போவது இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியானது.

ராகுல்காந்தியுடன் கார்கே சந்திப்பு

சித்தராமையா, தான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தபோது எந்த தவறும் செய்தது இல்லை என்றும், களங்கம் இல்லாமல் ஆட்சி நிா்வாகத்தை நடத்தியதாகவும், கட்சியின் வெற்றிக்கு தனது பங்களிப்பு அதிகமாக இருப்பதாகவும், தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை சந்தித்து இருவர் கூறிய கருத்துக்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் காலை 11 மணிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது, சித்தராமையாவிடம் பேசிய அவர், தங்களுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க இருப்பதாகவும், அனைவரையும் அரவணைத்து சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி

அதைத்தொடர்ந்து சந்தித்த டி.கே.சிவக்குமாரிடம் ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் முதல்-மந்திரி பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், தங்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்குவதாகவும், வரும் காலத்தில் உங்களுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதை ஏற்க மறுத்த டி.கே. சிவக்குமார், தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். மேலும் அவர், ஒருவேளை தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டால், சித்தராமையாவுக்கும் அந்த பதவி வழங்க கூடாது என்றும், அதற்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ராகுல் காந்தி ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. டி.கே.சிவக்குமாரின் பிடிவாதமான போக்கால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் ஐந்து நாள் பரபரப்பு ஆலோசனைகளுக்குப் பிறகு இன்று காங்கிரஸ் கட்சி சுமூகமாக முதல் மந்திரி விவகாரத்தை கையாண்டு இழுபறிக்கு முடிவு கட்டியுள்ளது.


Next Story