சனாதன தர்மம் பற்றி சித்தராமையா பரபரப்பு பேச்சு: 90 சதவீத இந்தியர்கள் அடிமை ஆக்கப்படுவார்கள் என குற்றச்சாட்டு


சனாதன தர்மம் பற்றி சித்தராமையா பரபரப்பு பேச்சு: 90 சதவீத இந்தியர்கள் அடிமை ஆக்கப்படுவார்கள் என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:45 PM GMT)

சனாதன தர்மத்தை அமலுக்கு கொண்டு வந்தால் 90 சதவீத இந்தியர்கள் அடிமை ஆக்கப்படுவார்கள் என்றும், எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக அரசின் சமூக நலத்துறை சாா்பில் சர்வதேச ஜனநாயக தின விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அரசியல் சாசன புத்தகத்தை வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சமூக நலத்துறை மந்திரி எச்.சி.மகாதேவப்பா, போலீஸ் மந்திரி பரமேஸ்வர், கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே, உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா, போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி, கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி, பொதுப்

பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி, மின்சாரத்துறை மந்திரி கே.ஜே. ஜார்ஜ், வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களும் உறுதிமொழி எடுத்தனர்.

அதுபோல் இந்த விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளும் பங்கேற்றிருந்தனர். அவர்கள் விதானசவுதா கட்டிடம் முன்பாக நின்று அரசியல் சாசன புத்தகத்தை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

அரசியல் சாசனத்தை ஒழித்துவிட்டு மனு தர்மத்தை (சனாதன தர்மம்) அமலுக்கு கொண்டு வந்தால், 90 சதவீத இந்தியர்களை அடிமைத்தனத்தில் தள்ளப்படுவார்கள். இதற்காக பல்வேறு சதிகள் நடைபெற்று வருகின்றன. நாம் இந்திய மக்கள் என்று சொன்னதுமே அரசியல் சாசன புத்தகம் திறந்து கொள்கிறது. அரசியல் சாசனத்தின் விருப்பங்களை நாம் சரியாக புரிந்து கொண்டு பின்பற்றாவிட்டால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது.

சமத்துவ சமுதாயம் மற்றும் மதசார்பற்ற கொள்கைகளின்படி எங்கள் அரசு அனைவரின் முன்னேற்றத்திற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மக்களின் பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்குவது தான் எங்கள் திட்டங்களின் நோக்கம் ஆகும். அரசியல் சாசனம் தொடங்கப்பட்ட பிறகு நமது நாட்டில் ஜனநாயகம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

புத்தர், பசவண்ணர் காலத்தில் இருந்தே ஜனநாயக கோட்பாடுகள் நமது மண்ணில் இருந்தது. அரசியல் சாசனத்தை அமலுக்கு கொண்டுவந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் நமது அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டது. அரசியல் சாசனத்திற்கு எதிரான சக்திகள், மனு தர்மத்தை கொண்டுவர முயற்சி செய்கின்றன. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்களில் கலெக்டர்கள் தலைமையில் சர்வதேச ஜனநாயக தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் அரசியல் சாசன புத்தகத்தை வாசிக்கும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் அரசியல் சாசன புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்த விழாவில், சனாதன தர்மத்தை ஒழிப்பதையே குறிக்கோளாக கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, சனாதன தர்மத்தை அமல்படுத்தினால் மக்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள் என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story