சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: கொலை கும்பலுக்கும் போலீசார் இடையே கடும் துப்பாக்கி சண்டை - ஒருவர் பலி என தகவல்


சித்து மூஸ்வாலா கொலை வழக்கு:  கொலை கும்பலுக்கும் போலீசார் இடையே கடும் துப்பாக்கி சண்டை - ஒருவர் பலி என தகவல்
x
தினத்தந்தி 20 July 2022 10:03 AM GMT (Updated: 20 July 2022 10:06 AM GMT)

சித்து மூஸ்வாலா கொலை கும்பல்களுக்கும் பஞ்சாப் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

பஞ்சாப்,

பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. பிரபல பஞ்சாபி மொழி பாடகரான இவர், சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியின் முன்னணி தலைவராக செயல்பட்டு வந்த இவர் சட்டசபை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

ஆம் ஆத்மி அரசு அமைந்ததும், மூஸ்வாலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. இதற்கு அடுத்த சில தினங்களில் அதாவது கடந்த மே 29 ஆம் தேதி மூஸ்வாலா தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது.

பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் தொடர்புடைய ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் என்ற மண்ணு குசா ஆகிய இருவர் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி அருகே பாக்னா என்ற கிராமத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அவர்களுக்கும் பஞ்சாப் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த துப்பாக்கி சண்டையில் கொலையாளி ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த சண்டையில் 3 போலீசார் காயமடைந்து உள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இன்னும் அந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


Next Story