வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது - பிரியங்கா காந்தி


வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது - பிரியங்கா காந்தி
x

கோப்புப்படம்

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை பிரியங்கா காந்தி சாடினார்.

புதுடெல்லி,

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மணிப்பூரில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது, மேலும் மணிப்பூர் மக்களின் பாதுகாப்பையும் அமைதியை மீட்டெடுக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று அதில் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்பத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.




Next Story