லாரியில் அனுப்பிய ரூ.28 லட்சம் முந்திரிபருப்பு கடத்தல்; போலீசில் வியாபாரி புகார்


லாரியில் அனுப்பிய ரூ.28 லட்சம் முந்திரிபருப்பு கடத்தல்; போலீசில் வியாபாரி புகார்
x

லாரியில் அனுப்பி வைத்த ரூ.28 லட்சம் முந்திரிபருப்பு கடத்தப்பட்டுவிட்டதாக போலீசில் வியாபாரி புகார் அளித்துள்ளார்.

மங்களூரு;

போலீசில் வியாபாரி புகார்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பந்தர் பகுதியை சேர்ந்தவர் ராமகாந்த் வசந்த். முந்திரிபருப்பு வியாபாரியான இவர், மங்களூரு வடக்கு போலீசில் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மங்களூருவுக்கு கப்பல் மூலம் 25½ டன் முந்திரி பருப்பு வந்திறங்கியது. அதன் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும். இதையடுத்து கடந்த மாதம்(ஜூலை) 25-ந்தேதி மங்களூருவில் இருந்து மராட்டியத்திற்கு முந்திரிபருப்பை வாடகை லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கடத்தல்

அதன்படி கடந்த 27-ந்தேதி முந்திாிபருப்பு போய் சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் குறித்த நேரத்தில் லாரி சென்றடையவில்லை. இதுபற்றி கேட்க லாரி டிரைவர், உரிமையாளரை தனித்தனியாக செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதனால் லாரியில் அனுப்பி வைத்த முந்திரி பருப்பை, டிரைவர் மற்றும் உரிமையாளர் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, அவர்களை கண்டுபிடித்து முந்திரி பருப்பை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story