சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்; ஆந்திர வாலிபர் கைது


சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்; ஆந்திர வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:46 PM GMT)

ஒலல்கெரே அருகே சந்த மரங்களை வெட்டி கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சித்ரதுர்கா-

ஒலல்கெரே அருகே சந்த மரங்களை வெட்டி கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை வனத்துைற அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

வனப்பகுதி

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா நீர்தடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வனப்பகுதி அருகேயே தற்காலிக சோதனை சாவடியும் வனத்துறையினர் அமைத்துள்ளனர்.

அங்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்த பின்னர் அனுப்பி வைக்கப்படுகிறது. இருந்தாலும் சந்தன மரங்கள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நீர்தடி வனப்பகுதியில் மர்மநபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக சித்ரதுர்கா வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாகன சோதனை

அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு யாரும் இல்லை. ஆனால் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் நீர்தடி சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காைர நிறுத்தி வனத்துறையினர் சோதனை செய்தனர்.

அதில், இருந்த நபர்கள் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடினர். அவர்களை வனத்துறையினர் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர். இதில் 3 பேர் தப்பி சென்று விட்டனர். விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ரவி (வயது 35) என்பதும், அவர் வனப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றதும் தெரியவந்தது.

சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

அவரிடம் இ்ருந்து 41 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரதுர்கா வனத்துைறயினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவத்தில் தப்பியோடிய சந்திரப்பா, முருகேஷ், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.


Next Story