ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்க சோனியா காந்தி கர்நாடகம் வருகை; பிரியங்காவும் கலந்து கொள்கிறார்


ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்க சோனியா காந்தி கர்நாடகம் வருகை; பிரியங்காவும் கலந்து கொள்கிறார்
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 2 Oct 2022 6:45 PM GMT)

ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ பாதயாத்திரையில் வருகிற 6-ந் தேதி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக அவர்கள் கர்நாடகம் வருகிறார்கள்.

மைசூரு:

பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ந் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

கா்நாடகத்தில் 2 நாட்கள் பாதயாத்திரையை முடித்த ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தாண்டவபுரா கிராமத்தில் தங்கினார்.

காந்தி சிலைக்கு மரியாதை

நேற்று காலையில் ராகுல்காந்தி, காந்தி ஜெயந்தியையொட்டி நஞ்சன்கூடு தாலுகா பதனவாலு கிராமத்தில் உள்ள காதி கிரமோத்யோக் மையத்துக்கு சென்றார். இங்கு கடந்த 1927 மற்றும் 1932 ஆகிய ஆண்டுகளில் மகாத்மா காந்தி வந்து சென்றார். அவரது நினைவாக அங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராகுல்காந்தி அங்கு சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பல தலைவர்களும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் ராகுல்காந்தி, அங்குள்ள நெசவாளர் மையத்துக்கு சென்று துணி நெய்வதை பார்த்தார். மேலும் அங்கு நடைபாதை அமைக்கும் தன்னார்வ பணியிலும் அவர் ஈடுபட்டார். பின்னர் கிராம மக்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுடன் சேர்ந்து மூவர்ண கொடியை வரைந்தார்.

காந்தியை கொன்ற...

முன்னதாக ராகுல்காந்தி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பிறகு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

இந்தியாவின் மகத்தான மகனை நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். பாரத் ஜோடோ யாத்ராவின் 25-வது நாளில் நாம் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளதால், எங்களது நினைவாற்றல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அகிம்சை, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நீதி என மகாத்மா காந்தியின் பாதையில் நடக்கிறோம்.

காந்தி, பிரிட்டீஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்து போராடியது போல, காந்தியை கொன்ற சித்தாந்தத்துடன் நாங்கள் போரில் இறங்கி உள்ளோம்.

ஹிம்சா (வன்முறை), அசத்யா (பொய்கள்) அரசியலுக்கு எதிராக பாரத் ஜோடோ யாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அகிம்சை மற்றும் சுயராஜ்ஜின் செய்தியை பரப்பும்.

உறுதியான குரல்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,600 கிலோ மீட்டர் தூரம் நம்முடன் பாதயாத்திரையாக வருபவர்களாக இருந்தாலும் சரி, குறுகிய காலத்துக்கு நம்முடன் நடந்து வரும் லட்சக்கணக்கான மக்களாக இருந்தாலும் சரி, இது சுயராஜ்ஜியத்தின் வெற்றியே. அச்சம், வெறுப்பு, பிரிவினை அரசியலுக்கு எதிராக இந்திய மக்களின் அமைதியான மற்றும் உறுதியான குரலாக இந்த பாதயாத்திரை உள்ளது.

ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளனர். காந்திஜி தனது உயிரை கொடுத்து காப்பாற்றிய அரசியலமைப்பு உரிமைகளுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்களில் பலர் நம்புகிறார்கள். மைசூருவில் இருந்து காஷ்மீர் வரையிலான பயணத்தை தொடரும்போது, இந்தியா முழுவதும் உள்ள எனது சக குடிமக்கள் அகிம்சை மற்றும் நல்லெண்ணம் என்ற உணர்வில் எங்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மைசூருவில் உற்சாக வரவேற்பு

இதையடுத்து பதனவாலு கிராமத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, நேற்று மாலை மைசூரு நகருக்குள் நுழைந்தார். மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு பாதயாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, தசரா கண்காட்சி பகுதியில் ஓய்வெடுத்தார்.

இன்று (திங்கட்கிழமை) காலை மைசூருவில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக மண்டியாவுக்கு செல்கிறார்.

சோனியா காந்தி வருகை

இந்த பாதயாத்திரையில் ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சோனியா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடகம் வருகிறார்கள். அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர். வருகிற 6-ந் தேதி அவர்கள் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் அவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்று நடப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

அதற்கு முன்னதாக குடகில் உள்ள ஒரு ரெசார்ட்டில் அவர்கள் தங்குகிறார்கள். பாதயாத்திரைக்கு 2 நாட்கள் விடுமுறை என்பதால் ராகுல் காந்தியும் அந்த ரெசார்ட்டில் தங்குவார். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வருகையையொட்டி அவர்கள் தங்கவுள்ள ரெசார்ட் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story