"இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" - அமித்ஷா கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி


இந்தி திணிப்பை நிறுத்துங்கள் - அமித்ஷா கருத்துக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
x
தினத்தந்தி 15 Sep 2023 5:58 AM GMT (Updated: 15 Sep 2023 6:08 AM GMT)

இந்தி மொழி குறித்த உள்துறை மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்

புதுடெல்லி,

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய இந்த ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்தினால் மட்டுமே வலிமையான நாடு உருவாகும். இந்தி ஒருபோதும் மற்ற இந்திய மொழிகளுடன் போட்டி போடவில்லை. விடுதலை போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட இந்தியாவில் ஒற்றுமை உணர்வைத் தூண்டியது" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் (டுவிட்டர்) சமூக வளைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 'நீங்கள் இந்தி பேசுகிறீர்கள், ஏனென்றால் அது உங்களுக்குத் தெரிந்த ஒரே மொழி, உங்களுக்குத் தெரிந்த ஒரே மொழி என்பதால் நான் இந்தி பேசுகிறேன்,நாம் இருவரும் ஒன்றா?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த பதிவில் அவர் 'இந்தி திணிப்பை நிறுத்துங்கள்' என்றும் தெரிவித்திருந்தார். நடிகர் பிரகாஷ் ராஜ்-ன் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.


Next Story